Thursday, May 23, 2019

Chapter 14 of 16 - D2H Story


*அத்தியாயம் 14*


வானில் சுக்கிரன் மாமரத்தின் இலைகளுடன் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தது. அனிதா தன் சேரைத் தொண்ணூறு டிகிரி திருப்பி, என்னை நேராகப் பார்க்கும்படி போட்டுக்கொண்டாள். நான் தொடர்ந்தேன்.


“அவன் உன்னோட சுதந்திரத்தப் பறிச்சுக்கிட்டான். நீ அத தியாகம்னு எடுத்துக்கிட்ட. உன்னய, அவன நம்பி இருக்க வச்சான். அப்பறம், நீ அவனோட சுதந்திரத்தப் பறிச்சுக்கிட்ட. அத அவன் இம்சையா நினைக்க ஆரம்பிச்சான்.”

“பிறகு?”

“அவன் தன்னோட சுதந்திரத்தப் பறிக்காத ஒருத்தியத் தேட ஆரம்பிச்சான்.”


அனிதா இப்போது அமைதியானாள். அவள் கண்கள் ஈரமாயின. ஆனால், மிக விரைவில் சுதாரித்துக்கொண்டாள்.

“மேல சொல்லுங்க, அங்கிள். நான் ரெடி.”

“அப்படி ஒருத்தி அவனுக்கு கிடைச்சா.”

“இப்ப, எனக்குத் தெரியும். நான் கத்த ஆரம்பிச்சேன். இப்ப இங்க இருக்கேன்.”

நான் அமைதியானேன்.


“அப்புறம், அடுத்து என்ன, அங்கிள்?”

“என்னுடைய ஊகம் இது. அவன் அவளோட சுதந்திரத்தப் பறிக்க முயற்சி செய்வான் ...”

அனிதா அனுபவித்துச் சிரித்தாள். அவள் சிரிப்பு அடங்குவதற்கு சில நிமிடங்கள் பிடித்தன.

சிரித்து முடித்த கையோடு சொன்னாள். “பைத்தியக்காரன். நான் அவன எவ்ளோ நேசிச்சேன்னு அவன் கடைசி வரைக்குமே புரிஞ்சுக்கலியே.”


“அடுத்து என்ன நடக்கும்னு ஊகிக்க முடியுதா, பாரு,” என்றேன்.

“அவன் நம்பர அன்பிளாக் பண்றேன்,” என்று சொல்லிக்கொண்டே அனிதா தன் கைப்பையிலிருந்த தன் மொபைல் போனை எடுத்தாள்.


சுக்கிரன் கீழ் வானில் கீழே இறங்கிக்கொண்டிருந்தது. இப்போது, அது மாமர இலைகளிலிருந்து விலகி, தனித்து நின்று ஒளிர்ந்தது.


அனிதா தன் வீட்டிற்குப் புறப்பட்டாள்.

*****

அனைத்து அத்தியாயங்களின் லிங்க்ஸைப் பார்ப்பதற்கு கீழே இருக்கும் ஹோம் பட்டனை அழுத்தவும்.


No comments:

Post a Comment